Twitter

Tuesday

ஒரு திருட்டும் சில தொலைபேசி அழைப்புகளும்


இந்தியா  புறப்பட இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன . வழக்கம் போல் வார
இறுதியில் அம்மா அப்பாவுடன் பேசினேன் . அப்பா என்றைக்கும் போல்தான்
பேசினார் . அம்மாவின் பேச்சில் சிறிது உற்சாகம் குறைந்து வருத்தம்
தொனித்தது . "என்னம்மா , 'டல் 'லா பேசுறீங்க ? தூங்கிட்டு இருந்தீங்களா
?" என்று கேட்டதற்கு "அதெல்லாம் இல்லை " என்றார்கள் . பேசி
முடித்துவிட்டு அடுத்ததாக சென்னையிலிருக்கும் சித்திக்குத் தொடர்பு
கொண்டேன் . சித்தி பேசிக்கொண்டிருக்கையில் "ஊரில் அம்மாவுக்குப் பேசினாயா
?" என்றார் . "பேசினேன் . அம்மா கொஞ்சம் டல்லா பேசினாங்க . என்னன்னு
கேட்டதுக்கு ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாங்க . அப்பா எதுவும்
திட்டியிருப்பாரோ ?" என்றேன் . சித்தி தொடர்ந்தார் "அண்ணன் மகன் ,
பொடியன் போட்டிருந்த செயினை யாரோ திருடிட்டு போயிட்டானாம் . வீட்ல அப்போ
அம்மா மட்டுந்தான் இருந்தாங்க போல . அதான் அப்பா திட்டிருப்பாரு " .
அம்மாவின் வருத்தம் என்னைக் கவலையில் ஆழ்த்தியது . அவரால் என்ன செய்ய
இயலும் . குழந்தையின் கழுத்தில் தேவையில்லாமல் நகையை அணிவித்தது அண்ணி
செய்த தவறு . இந்த இராமநாதபுரத்துப் பெண்கள் வழக்கம் ஏன் இவ்வளவு
மோசமாயிருக்கிறதோ? நகை அணிந்து கொண்டுதான் இந்த உலகில் பிறந்தவர்கள் போல,
நகை ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா? தாங்கள் நகை சுமப்பது போதாதென்று
குழந்தைகளுக்கும் போட்டுவிட்டு அழகு பார்ப்பது ?படித்த மக்கள் தானே .



மறுநாளும் ஊருக்குத் தெலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மாவுடன் பேசினேன் .
"என்னம்மா , பொடியன் நகைய எவனோ திருடிட்டு போயிட்டானா ?" என்றேன், அம்மா
ஆச்சரியப்பட்டவாறே " உனக்கு யார் சொன்னா ?" என்றார்கள். " இன்டெர்நெட்-ல
போட்ருந்தான்" என்று  விளையாட்டாய்ச் சொல்லச் சிரித்தார்.  " முந்தா நாள்
ஒருத்தன் வீட்டுக்கு வந்து மாதவ அண்ணனைத் தெரியும்னு சொல்லிட்டு வந்தான்.
முத்துப்பேட்டைல ஏதோ கடையில் வேலை பாக்கிற பையன்னு சொன்னான். எதோ வழி
தவறி நம்ம ஊருக்கு வந்துட்டுதா சொன்னான் . ஊருக்குத் திரும்பிப் போகக்
கொஞ்சப் பணம் வேணும்னு கேட்டான். அப்பா வெளில போயிருந்தாங்க. அப்பா
வந்தவுடனே கேட்கச் சொல்லிட்டு அவன வீட்டுக்கு முன்னால இருந்த பெஞ்சுல
உக்காரச் சொல்லிட்டு   நான் தோட்டத்தில காய் பறிக்கப் போயிட்டேன்.
பொடியன் வெளில வெளயாடிட்டு இருந்தான் , நான் திரும்பி வந்து பார்த்தா
அவன்  கடத்தெருவுக்குப் போயிட்டு திரும்பி வரேன்னு சொல்லிட்டு
போயிட்டான். நேத்துத் தான் கவனிச்சோம், பொடியன் கழுத்துல போட்ருந்த
நகையக் காணோம் " என்று அச் சம்பவத்தை அம்மா விவரித்தார்.  பின்பு பேச்சு
என் பயணம் குறித்துத் திரும்பியது. எப்போது   விமானம் புறப்படுகிறது,
சென்னையை அடைய எவ்வளவு நேரமாகும் என்றெல்லாம் விசாரித்துக்
கொண்டிருந்தார் .

முத்துப்பேட்டையில் , இரண்டாவது அண்ணன் காவல்துறை உதவி ஆய்வாளராய்ப் பணி
புரிகிறார். அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு வந்து திருடிக் கொண்டு சென்றது
ஆச்சரியமாய் இருந்தது, இத்தனைக்கும் எங்கள் ஊர் திருட்டு நடக்கும்
அளவுக்குப்பெரிய ஊரும் அல்ல .



பன்னிரெண்டு மணி நேரப்பயணத்தில்  சென்னையிலிருந்தேன் . அலுவலகப் பணி
காரணமாய் உடனே ஊர் செல்ல முடியவில்லை .

தினமும் அம்மாவுடனும் அப்பாவுடனும் தொலைபேசினேன்.
முத்துப்பேட்டையிலிருந்து போலீஸ்   அண்ணன் விசாரித்துச் சிறிது தகவல்
திரட்டியிருந்தான் . ஊரில் இருக்கும் மூத்த அண்ணாவிடம் திருடிச்
சென்றவனைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறான். ஊரில் அண்ணாவிடம்
பேசியபோது எங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பையன்
, இன்னாரின் மகன் என்றெல்லாம் தகவல் கிடைத்ததாகச் சொன்னார். மறுநாள்
அவ்வூருக்குச் சென்று விசாரித்துவிட்டு வரப் போவதாகச் சொன்னார்.





மறுநாள் இரவு பேசுகையில் அண்ணனிடம் கேட்டேன் "என்னண்ணா , இன்னிக்கு
போனீங்களா ?" ."போனேன். அந்தப் பையன் இருந்தான். நானும் என்னோட பிரண்டும்
வண்டில போனோம். எங்களப் பாத்ததும் காட்டுக்குள்ள ஓடியே போயிட்டான்.
இருபது வயசு கூட இருக்காது. அந்தப் பையனோட அப்பாவப் பாத்துப் பேசினோம்.
இந்த மாதிரி உங்க பையன் எங்க வீட்டுக்கு வந்து பொடியனோட தங்கச் செயினத்
திருடிட்டுப் போயிட்டான்னு சொன்னோம். அவரு ரொம்ப வருத்தப்பட்டாரு.
'வீட்டுக்கு அடங்காமத் திரியிறான். எது சொன்னாலும் கேக்க மாட்டிக்கான்.
முத்துப் பேட்டையில் ஒரு கடையில் வேலைக்குச் சேத்து விட்டேன். அங்க
இருந்தும் ஓடி வந்துட்டான். திருட்டுப் பழக்கமும் சேர்ந்துருச்சு. நீங்க
போங்க. அவன் திரும்பி வந்ததும்   நான் விசாரிக்கிறேன்' அப்படீன்னு
சொன்னாரு. அந்த ஊருக்குள்ள கேட்டதுல ரெண்டு மூணு நாளா தண்ணியடிச்சுட்டு
உளறிக்கிட்டு இருந்தான்னு சொன்னாங்க. நாளைக்கு அவனோட அப்பா   நம்ம
வீட்டுக்கே வந்து தகவல் சொல்றதா சொல்லிருக்காரு" என்றார் அண்ணன்.



அடுத்த நாள் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார். " அந்தப்
பையனோட அப்பாவும் அந்த ஊர்க்காரங்களும் இன்னிக்கு   நம்ம  வீட்டுக்கு
வந்திருந்தாங்க" என்றார். "என்ன சொன்னாங்க ?" என்றேன். " செயினத்
திருடிட்டுப் போயி அருப்புக்கோட்டையில் ஒரு நகைக் கடையில் அடகு
வச்சுருக்கான் , கிடச்ச பணத்தில சாராயம் குடிச்சிட்டு நல்லா
செலவழிச்சிருக்கான். அவனோட அப்பாவப் பார்க்கறதுக்கு ரொம்ப பாவமா இருக்கு
, சம்சாரிங்க தான், காட்டு வேலை செஞ்சுதான் பொழைக்கிறாங்க போல " என்றார்.

நகையை எப்பிடியாவது  அடகுக் கடையில இருந்து மீட்டுக் கொண்டு வந்து
கொடுப்பதாகவும் , போலீஸிடம் சொல்லிவிட வேண்டாமென்றும் அப்பாவிடம் அந்த
ஊர்க்காரர்கள் உறுதியளித்ததாக அப்பா சொன்னார்.



அலுவலக வேலைகள் முடித்து ஊர் செல்வதற்கு நானும் என் மனைவியும் தயாரானோம்.
தீபாவளிக்கு இன்னும் இரு நாட்களே இருந்தன. அப்பாவிடம் மீண்டும்
பேசியபோது  மதுரைக்கு  எப்போது விமானம், கார் எப்போது அனுப்ப?
என்றெல்லாம்  கேட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று ஏதோ நினைவு வந்தவராக,
" செயினை திருப்பிக் கொடுத்துட்டாங்கப்பா" என்றார். "அருப்புக் கோட்டை
அடகுக் கடையிலிருந்து வாங்கிட்டு வந்து   திருடிட்டுப் போன பையனோட அப்பா
சாயங்காலம் கொண்டுவந்து குடுத்துட்டுப் போனாரு. கடன் வாங்கித்தான் நகைய
மீட்டுக் குடுத்திருக்காரு. தீபாவளி செலவுக்குக் கூட பணம் இல்லைன்னு
அழுதாரு. பார்க்க ரொம்பப் பாவமா இருந்துச்சு. சரி , செலவுக்கு வச்சுக்கச்
சொல்லி ஒரு ஐநூறு ரூபாய் பணம் கொடுத்தேன்" என்று சொன்னார்.



இரு நாட்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டோம். ஒரு மணி நேர விமானப் பயணம்
தொடர்ந்து இருமணி நேர கார்ப் பயணம். வீட்டினை அடைந்தபோது இரவு பத்து
மணியாயிற்று. ஒரு வருட இடைவெளியில் அனைவரையும் மீண்டும் சந்திக்கும்
நிகழ்வு. தூக்கக் கலக்கத்தில் எழுந்துவந்து என்னைப் பார்த்துச்
சிரித்தான் பொடியன். அவன் கழுத்தில் தொங்கிய   தங்கச் சங்கிலி விளக்கின்
ஒளியில் மின்னிய

No comments:

Post a Comment